பெண்களுக்கு தன்னம்பிக்கையே பேரழகு!


பெண்களுக்கு தன்னம்பிக்கையே பேரழகு!
x
தினத்தந்தி 10 Sep 2017 7:41 AM GMT (Updated: 10 Sep 2017 7:41 AM GMT)

“ஆண்கள் கோலோச்சும் துறையில் பெண்கள் முதன்முதலில் காலடி எடுத்துவைத்தால், ‘தங்களுக்கு நிகராய் இவரால் வேலை செய்ய முடியுமா?’ என்ற கேள்வியை சில ஆண்கள் எழுப்புவார்கள்.

“ஆண்கள் கோலோச்சும் துறையில் பெண்கள் முதன்முதலில் காலடி எடுத்துவைத்தால், ‘தங்களுக்கு நிகராய் இவரால் வேலை செய்ய முடியுமா?’ என்ற கேள்வியை சில ஆண்கள் எழுப்புவார்கள். அதோடு கேலியும், கிண்டலும் கிளம்பும். இந்த நிலை எனக்கும் ஏற்பட்டது. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் மனநிலையுடன் துணிச்சலாக செயல்பட்டேன். அதனால்தான் என்னால் சாதிக்க முடிந்தது. அதே மனோதைரியம் எல்லா பெண்களுக்கும் வரவேண்டும். வந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும்” என்கிறார், தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜய குமார்.

முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பத்மநாபனின் மகள் இவர். இவரது கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 48 தீயணைப்பு-மீட்புப்பணி நிலையங்கள் இயங்குகின்றன. பொறுப்பு நிறைந்த இந்த பணியை மேற்கொள்ளும் இவர், வெளிநாடுகளுக்கு சென்று துறை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, பதக்கங்களையும் குவித்து வருகிறார்.

பணியோடு, பதக்கங்களையும் குவித்துக்கொண்டிருக்கும் அவரை வேலூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

“எனது தந்தை பி.கே.பத்மநாபன் ஐ.ஏ.எஸ். அதிகாரி. அம்மா டாக்டர் வி.எஸ்.கிருஷ்ணகுமாரி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குனராக பணிபுரிந்தவர். எனது தங்கை சாந்தி சந்தானகிருஷ்ணன், லண்டனில் டாக்டராக பணியாற்றுகிறார். எனது கணவர் விஜயகுமார் ஏர் இந்தியா நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கிறார். எங்கள் மகன் ஷித்திஜ் விஜயகுமார் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

நான் சென்னை எத்திராஜ் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு பி.எட். படித்தேன். எனது கணவர் இண்டஸ்ட்ரியல் ரெகுலேஷன் மேனேஜ்மெண்ட் பற்றி படித்திருந்தார். அந்த சப்ஜெக்ட் பற்றி தெரிந்துகொள்ளும் ஆசை ஏற்பட்டதால், நானும் அதை தேர்வுசெய்து படித்தேன்.

பின்னர் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரியில் ‘டிப்ளமோ இன் பயர் என்ஜினீயரிங்’ கற்று தேர்ச்சி பெற்றேன். அறிவு, ஆற்றல், திடம், சமயோசிதம் போன்ற பல விஷயங்களை என்னால் அங்கு கற்றுக்கொள்ள முடிந்தது. பின்பு லண்டனில் ‘மாஸ்டர் டிப்ளமோ இன் பயர் என்ஜினீயரிங்’ கற்றேன். இந்த கல்வியை பெற்ற இந்தியாவின் முதல் பெண் நான்தான்.

திருமணத்திற்கு பிறகும், தாயான பின்பும் நான் தொடர்ந்து படித்தேன். கணவரை அலுவலகத்திற்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி விட்டு முயற்சி செய்து படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலே வெற்றிபெற்று 2003-ம் ஆண்டு சென்னையில் தீயணைப்புத் துறை அதிகாரியாக பொறுப்பேற்றேன். இதன் மூலம் இந்தியாவிலேயே பெருநகரத்தில் பணிபுரியும் முதல் தீயணைப்புத்துறை அதிகாரியானேன்” என்று தனது கல்வித் தகுதியை பட்டியலிடும் மீனாட்சி விஜயகுமார் வாழ்க்கை முழுவதும் படித்து, புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டவர். பரபரப்பு நிறைந்த பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் இப்போது எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்.

“கடைசி மூச்சு இருக்கும் வரை படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என் அம்மா சொல்வார். எனது பத்து வயதில் என் தந்தை இறந்துவிட்டார். அப்போது என் தங்கைக்கு 8 வயது. தந்தையின் இழப்பு எங்களை கடுமையாக பாதித்தது. அம்மா பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தபடி, எங்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்தார். படிப்புதான் மிக சிறந்தது என்ற பாடத்தை அவர் சிறுவயதிலே எங்கள் மனதில் பதிவேற்றிவிட்டார். அதனால் நாங்கள் வெறித்தனமாக படிப்போம்.

எனது தாத்தா கக்கன் போலீஸ் துறை அமைச்சராக இருந்தவர். அதனால் கம்பீரமாக அணிவகுத்து வரும் போலீஸ் அதிகாரிகளை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்தேன். அந்த சீருடை மீது எனக்கு அப்போதே ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. நானும் கம்பீரமாக வலம் வரவேண்டும். நம்மால் முடிந்த சேவைகளை மக்களுக்கு ஆற்றவேண்டும் என்று விரும்பினேன். அந்த விருப்பம்தான் நான் தீயணைப்புத் துறையை தேர்ந்தெடுத்து படிக்கவும், இந்த துறைக்கு வரவும், சாதிக்கவும் காரணமாக அமைந்தது” என்கிறார்.

மீனாட்சி விஜயகுமார் தீயணைப்புத்துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து, உயிரை பணயம்வைத்து பணியாற்றி வருகிறார். அவரால் பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இவரது சாகச பணி அனுபவங்களை கேட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மெய்சிலிர்த்திருக்கிறார்.

“சுனாமி சென்னையை தாக்கியபோது வட சென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்தேன். வடசென்னையில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அங்கு குடிசைகளும் அதிகம். சுனாமி நேரத்தில் அந்த பகுதி மக்களுக்கு சேவையாற்றியது, எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பல்வேறு அனுபவங்களை தந்தது. எதற்கும் நெகிழாத மலை போன்ற மனதும் பெண்களுக்கு தேவை என்பதை அப்போது நான் உணர்ந்து செயல்பட்டேன். தீயணைப்புத் துறை வாகனத்தையும் என்னால் தனியாக ஓட்ட முடியும். அவசர நேரங்களில் பிறரை சாராமல் பணியாற்ற இது உதவும்.

2015-ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் நான் சேவை செய்துள்ளேன். அப்போது ஒரு ஆஸ்பத்திரிக்குள் வெள்ளம் புகுந்தபோது 60 பேரை உயிருடன் மீட்டோம். அது என்னால் மறக்கமுடியாத சம்பவம். சென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட ஒரு தாயையும், குழந்தையையும் உயிருடன் மீட்டேன். அதற்காக இவ்வாண்டு சுதந்திரதின விழாவில் வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருது தமிழக அரசால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது நான் இந்தியாவில் இல்லாததால் என்னால் அவ்விருதினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அச்சமயம் நான் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப்போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றேன்” என்கிறார்.

இவர் துடிப்பும், மதிநுட்பமும் நிறைந்த அதிகாரியாக இருப்பதால் விபத்து, ஆபத்து, இயற்கை சீற்றம் போன்றவை சென்னையை சுற்றி ஏற்படும்போதெல்லாம், அங்கு விரைந்து சென்று மக்கள் பணியாற்றுவது இவரது வழக்கமாக இருந்துவருகிறது.

மீனாட்சி விஜயகுமாரிடம், ‘பெண்களுக்கு எது அழகு?’ என்று கேட்டால், “புன்னகையும், தன்னம்பிக்கையுமே பெண்களுக்கு பேரழகு” என்கிறார்.

பொதுவாக உயர் அதிகாரிகள் தங்கள் அன்றாட பணிகளிலே கவனமாக இருப்பார்கள். அப்போது இயல்பாகவே அவர் களிடம் இருக்கும் உடல்திறனும், விளையாட்டுத்திறனும் குறைந்துவிடும். ஆனால் அதற்கு மீனாட்சி விஜயகுமார் விதிவிலக்கு. அன்றும் இன்றும் அவர் உடல்திறனை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார். விளையாட்டில் தனக்கு இருக்கும் திறனை உலக அளவில் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார். அதனால் பதக்கங் களை குவிக்கும் பெண் அதிகாரியாகவும் இவர் திகழ்கிறார். விளையாட்டுத்திறன் இவருக்கு பாரம்பரியமாகவே கிடைத்துள்ளது.

“எனது தந்தை ஓட்டப்பந்தய வீரர். அதனால் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்தது. பள்ளி பருவத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன். கல்லூரி பருவத்தில் பல்கலைக்கழக ஆக்கி அணியில் இடம் பெற்றேன். டென்னிஸ் விளையாட்டிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். 2010-ல் தென்கொரியாவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், 2012-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளேன். டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். விளையாட்டு போட்டிகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். எனது விளையாட்டுத் திறன் சாதனைகளுக்காக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா என்னை பாராட்டியிருக்கிறார்.

2017-ம் ஆண்டுக்கான சர்வதேச போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கான விளையாட்டுப்போட்டி அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. 64 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குபெற்ற இந்த போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், தலா ஒரு வெண்கல பதக்கம் வென்றேன். அந்த போட்டியில் பங்குபெற்று தீயணைப்புத்துறையில் பதக்கம் பெற்ற ஒரே பெண் அதிகாரி நான்தான். வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் 3 முறை பதக்கங்கள் பெற்ற ஒரே இந்திய பெண்ணும் நான்தான்.

விளையாடுவதற்கு பெண்களுக்கு, பிரபல பேட்மிண்டன் வீராங் கனை பி.வி.சிந்து போன்று உடல்கட்டு இருந்தால்தான் முடியும் என்றில்லை. எதையும் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனதைரியம் இருந்தால்போதும். பெண்கள் ஒருபோதும் தங்களை பல வீனமானவர்களாக கருதிவிடக்கூடாது. எதையும் சாதிக்கமுடியும் என்ற தைரியத்தோடு தங்களுக்கு பிடித்த துறையில் இறங்கி விழிப்போடு செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

பெண்கள் 40 வயதுக்கு மேலாகி விட்டால் தியானம், யோகாசனம் செய்யவேண்டும். டென்னிஸ் விளையாடலாம். தினமும் உடற்பயிற்சி செய்து உடலை முடிந்த அளவு வலுவாக வைத் திருக்கவேண்டும். எனது உடலில் 8 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போதும் நான் என்னை பலவீனமாக கருதாமல் வீறுகொண்டு எழுந்து நின்று போட்டிகளில் சாதனை படைத்துள்ளேன். எங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விளையாடுவோம். நான் எங்கள் தீயணைப்புத்துறை வீரர்களுடன் விளையாடுவேன். தீயணைப்புத் துறையினர் அனைவரும் உடல்வலுவோடு இருக்கவேண்டும் என்பதற்காக வடமேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு-மீட்புப்பணி நிலையங்களிலும் இறகுபந்து விளையாட வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். தினமும் விளையாடி வருகிறார்கள். அதனால் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு தீயணைப்புத்துறை-மீட்புப்பணித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் எங்கள் மண்டலம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது” என்கிறார்.

மனதையும், உடலையும், சிந்தனையையும் வலுவாக வைத்திருக்கும் மீனாட்சி விஜயகுமார், உணவிலும் தனிக்கவனம் செலுத்து கிறார்.

“நான் காலையில் காய்கறி சூப் ஒரு கப் பருகுவேன். மதியம் ஒரு கப் சாதம் காய்கறியோடு சேர்த்து சாப்பிடுவேன். இரவிலும் காய்கறி சூப் பருகுவேன். தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வேன். காய்கறிகளை பெண்கள் அதிகம் சாப்பிடவேண்டும். பெண்கள் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியாக வாழத்தான் நாம் பிறந்திருக்கிறோம். அதை நினைத்து புன்னகையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, அயராத உழைப்பு இவை மூன்றும் எனது வெற்றிக்கான தாரகமந்திரங்கள்! ” என்று கம்பீரமாக சிரித்தபடி சொல்கிறார், மீனாட்சி விஜயகுமார்.

Next Story