நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 9:19 PM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்றும் நீடித்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் நேற்று ஆசிரியர், அரசு ஊழியர்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைக்கு வரவில்லை.

காத்திருப்பு போராட்டம்

இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்ததால், நேற்று காலை முதலே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அங்கு கூட தொடங்கினர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமரசம் செய்த போலீசார் பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்குள்ள மரத்தடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் குவிப்பு

இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருக.செல்வராசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

இவர்களின் போராட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். 

Related Tags :
Next Story