சாலை பணிகளை தொடங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


சாலை பணிகளை தொடங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2017 10:45 PM GMT (Updated: 14 Sep 2017 9:19 PM GMT)

கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலை பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சுந்தரராசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தொடங்க வேண்டும்

கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பெங்களூரு, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பல ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கும் செல்கிறார்கள்.

ஆனால் இந்த சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளில் 680 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். எனவே, அரசின் நிலைபாடுகள் என்னவாக இருந்தாலும் சரி, மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், ஜெயராமன், கோவிந்தசாமி, நஞ்சுண்டன், இருதயராஜ், சாம்ராஜ், வாசுதேவன், ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story