ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: டி.கல்லுப்பட்டியில் சாலையோர கடைக்காரர்கள் திடீர் மறியல்


ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: டி.கல்லுப்பட்டியில் சாலையோர கடைக்காரர்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 23 Sep 2017 7:50 PM GMT)

மதுரை மாவட்டம், பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் கலெக்டர் வீரராகவ ராவ் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

பேரையூர்,

மதுரை மாவட்டம், பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் கலெக்டர் வீரராகவ ராவ் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது டி.கல்லுப்பட்டியில் திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாருகாலின் மேல் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆக்கிரமிப்பு இடங்களை குறியீடு செய்யும் பணியில் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. சுகன்யா, தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து சாலையோர கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கை விடச்செய்தனர்.

அதன்பின்னர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து வர்த்தக சங்கத்தினர், சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குமாறு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆர்.டி.ஓ உங்களின் சுகாதாரத்திற்காகத் தான் இந்த நடவடிக்கை, முழுமையான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் வருகாலின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும் என்று கூறினார்.


Next Story