தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Oct 2017 12:43 AM GMT (Updated: 11 Oct 2017 12:43 AM GMT)

தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கீழகூட்டுடன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ராஜூவ்நகர், அய்யப்பன் நகர், பாலசிங் நகர், அய்யனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு அரசு நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 6 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் பரமசிவன், அருண்விஜய்காந்த் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 50 பேர் நேற்று காலையில் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் காலிக்குடங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) சிவராஜன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விரைவில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story