கடையம் அருகே ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் ரூ.5 லட்சம் நகை– பணம் அபேஸ்


கடையம் அருகே ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் ரூ.5 லட்சம் நகை– பணம் அபேஸ்
x
தினத்தந்தி 17 Oct 2017 8:30 PM GMT (Updated: 17 Oct 2017 2:48 PM GMT)

கடையம் அருகே ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

கடையம்,

கடையம் அருகே ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

பெண் டாக்டர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் ராமகுரு. நெல்லை மருத்துவ கல்லூரி டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி உமையபதி (வயது 62). டாக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் நெல்லைக்கு சென்று தீபாவளி பொருட்கள் வாங்கியுள்ளார்.

பின்னர் வண்ணார்பேட்டையில் இருந்து முக்கூடல் வழியாக கடையம் செல்லும் பஸ்சில் பொட்டல்புதூருக்கு டிக்கெட் எடுத்துள்ளார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கூட்ட நெரிசலில் உமையபதி பயணம் செய்து வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் நகைகள் மற்றும் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

நகை–பணம் அபேஸ்

பொட்டல்புதூர் பஸ் நிலையத்தில் உமையபதி இறங்கியவுடன், பையில் வைத்திருந்த இரண்டு பர்ஸ்கள் தவறியது பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஒரு மணிப்பர்சில் நெக்லஸ், ஆரம் மற்றும் வளையல்கள் மொத்தம் 23½ பவுன் நகையும் மற்றொரு மணிப்பர்சில் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

குறிப்பிட்டு உமையபதி கைப்பையில் இருந்த இரண்டு மணி பர்ஸ்கள் மட்டும் திருடு போயுள்ளது. அவர் நகைகள் மற்றும் பணம் வைத்திருந்ததை நன்கு தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் உமையபதியை பின்தொடர்ந்து நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்து இருக்கலாம் என தெரியவருகிறது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் உமையபதி புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story