கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்தால் தினசரி ரூ.500 அபராதம் அதிகாரிகள் எச்சரிக்கை


கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்தால் தினசரி ரூ.500 அபராதம் அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2017 11:00 PM GMT (Updated: 21 Oct 2017 9:51 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம் அடைந்து உள்ளது. கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்தால் தினசரி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார பணிகள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆச்சிப்பட்டி, ராசக்காபாளையம் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை நேற்று காலை சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு உள்ளதா? குடிநீர் மூடி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் அவர் பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது தாசில்தார் செல்வபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத்குமார், விவேக் மற்றும் டாக்டர்கள், சுகாதார பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஒரு நாளைக்கு ரூ.500 அபராதம்

வடக்கு ஒன்றிய பகுதிகளில் 39 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த 1½ மாதமாக பொதுமக்கள் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை. மேலும் வீடுகள், நிறுவனங்கள், பள்ளிகள், புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்தால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பிறகும் தொடர்ந்து அதேபோன்று செயல்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். பொதுமக்கள் தண்ணீரை நன்கு மூடி வைக்க வேண்டும். சாதாரண காய்ச்சல் இருந்தால் கூட, டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தெற்கு ஒன்றியம்

இதுபோல் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் அம்பராம்பாளையம், சின்னாம்பாளையம், கஞ்சம் பட்டி, மாக்கினாம்பட்டி உள்பட 26 ஊராட்சிகள் உள்ளன. இவைகளில், ஒரு லட்சத்திற்கு மேல்மக்கள் வசித்து வருகின்றனர். ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில், கொசுகளை அழிக்கும் பொருட்டு அபேட் மருந்துகள் ஊற்றப்பட்டும், புகை மருந்து அடித்தும் மற்றும்கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அகற்றப்பட்டும் வருகிறது. மேலும், டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகபொதுமக்கள், மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நல்ல தண்ணீர் குளோரினேசன் செய்யப்பட்டு பாதுகாக்கப்ட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மின் இணைப்பு துண்டிப்பு

இது குறித்து தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகுமார் கூறியதாவது:- டெங்கு காய்ச்சல் தடுக்கும் பணி தெற்கு ஒன்றியத்தில் தீவிரமாக நடந்துவருகிறது. ஆகவே பொதுமக்கள் தங்கள்வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் சூரிய ஒளிபடாதவாறும், கொசு புகாதவாறும் மூடி வைக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரதுறை பணியாளர்கள் ஆய்வின் போது வீடு, ஓட்டல், தோட்டம் ஆகிய இடங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில், புழுக்கள் உற்பத்தியாவது தெரியவந்தாலும், கொசு உற்பத்தியாகும் பொருட்கள்காணப்பட்டாலும் வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளகுடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு

இதுபோல் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அரசு ஆஸ்பத்திரி மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர்ராஜா தலைமை தாங்கினார். நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளை பார்க்க தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார பணிகளை மேம்படுத்த வேண்டும். டெங்கு கொசுவை பொறுத்தவரை நல்ல தண்ணீர் மூலம் உற்பத்தியாகிறது. எனவே ஆஸ்பத்திரி வளாகத்தில் குடிநீர், மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். நகராட்சி பணியாளர்கள் வாரத்துக்கு ஒருமுறை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனிமேல் தினமும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார பிரிவு ஆய்வாளர்கள், அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story