திருச்சியில் விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளக்க வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு


திருச்சியில் விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளக்க வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2017 11:00 PM GMT (Updated: 2 Nov 2017 8:41 PM GMT)

திருச்சியில் விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.

இந்தநிலையில் நிலம் அளப்பதற்காக நேற்று மாலை விமானநிலையம் அருகே பட்டத்தம்மாள் தெரு பகுதிக்கு திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் தலைமையில் துணை தாசில்தார் தமிழ்செல்வி, நிலஅளவையர் சந்திரன், பொதுப்பணித்துறை பொறியாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பத்மநாபன் உள்ளிட்டோர் வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து நிலம் அளக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து அந்த பகுதியினர் கூறும்போது, “இந்த பகுதியில் 400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக இங்கு தான் வசித்து வருகிறோம். விமானநிலைய விரிவாக்கத்துக்காக எங்கள் இடத்தை காலி செய்ய முடியாது. இது தொடர்பாக விமானநிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எங்கள் பகுதி மக்களிடம் இதுவரை ஒருமுறை கூட பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. ஆகவே நிலம் அளக்கும் பணியை தொடரக்கூடாது“ என்று கூறினர்.

இந்நிலையில் நிலம் அளக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த ராம்பிரியா என்ற பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் அப்துல்அஜீஸ், இன்ஸ்பெக்டர் பெரியய்யா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில், இந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் 15 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டியினர் கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story