காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி


காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 Nov 2017 10:00 PM GMT (Updated: 12 Nov 2017 7:12 PM GMT)

காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ரவுடி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கு சம்பந்தமாக போலீசார் விசாரணைக்காக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சுரேசை அழைத்து வந்தனர்.

அப்போது அவரது மனைவி கோட்டீஸ்வரியும் உடன் வந்தார். போலீசார் அவரிடம் விசாரித்துக்கொண்டு இருந்தபோது, சுரேஷ் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டார்.

உடனே போலீசார் அவரை கழிவறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சுரேஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

நீண்டநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்தில் ரத்தம் வடிந்த நிலையில் சுரேஷ் கிடந்தார். இதனை பார்த்து இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுரேசை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story