அழுகிய நிலையில் மீன் வியாபாரி பிணமாக மீட்பு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


அழுகிய நிலையில் மீன் வியாபாரி பிணமாக மீட்பு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2017 11:00 PM GMT (Updated: 13 Nov 2017 9:10 PM GMT)

கீழையூர் அருகே அழுகிய நிலையில் மீன்வியாபாரி பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவருடைய உறவினர்கள் முத்துப்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள செருப்பட்டாக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விட்டல்ராஜ் (வயது 55). மீன் வியாபாரி. இவருடைய மனைவி பாப்பம்மாள். இவர்களுக்கு ஆரோக்கியரூபி, ஆர்த்தி ஆகிய 2 மகள்களும், ரூபன் என்ற மகனும் உள்ளனர். விட்டல்ராஜ் முத்துப்பேட்டை, நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன்களை மொத்தமாக வாங்கி வந்து செருப்பட்டாக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். கடந்த மாதம் 29-ந் தேதி அதிகாலை வழக்கம்போல் அருகில் உள்ள நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்த யூசுப் என்பவரின் லோடுஆட்டோவில் நாகப்பட்டினத்துக்கு மீன் வாங்க சென்றார். அவருடன் மேலும் 2 பெண்கள் உள்பட 7 மீன் வியாபாரிகளும் சென்றனர்.

இவர்கள் அனைவரும் மீன் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிய நிலையில் விட்டல்ராஜ் மட்டும் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர், உடன் சென்றவர்களிடம் விசாரித்தபோது வரும் வழியில் கீழையூர் அருகே சிறு விபத்து ஏற்பட்டதாகவும் பலருக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் விட்டல்ராஜை பார்க்கவில்லை என்று கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த விட்டல்ராஜின் மனைவி பாப்பம்மாள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.

ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கூறினார். இதைத்தொடர்ந்து பாப்பம்மாள் உறவினர்களுடன் கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அவர்களும் புகாரை வாங்க மறுத்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கூறினர். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் விட்டல்ராஜ் மாயமானது குறித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் விட்டல்ராஜின் உறவினர்கள் விபத்து நடந்ததாக கூறப்படும் கீழையூர் அருகே உள்ள ஒரு பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது சாலையோரம் மூடியை நிலையில் உள்ள வடிகாலில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து சந்தேகப்பட்டு மூடியை திறந்து பார்த்தனர். அப்போது அதற்குள் திணிக்கப்பட்ட நிலையில் விட்டல்ராஜ் உடல் அழுகிய நிலையில் பிணமாக இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டல்ராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை விட்டல்ராஜின் சொந்த ஊரான செருப்பட்டாக்கரையில் உள்ள விளாத்துவெளி பஸ் நிறுத்தம் அருகில் அவரது உறவினர்கள், கிராம மக்கள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கூடினர். பின்னர் அவர்கள் விட்டல்ராஜ் மாயமானது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டி முத்துப்பேட்டை மற்றும் கீழையூர் போலீஸ் நிலைய அதிகாரிகளை கண்டித்தும், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி விட்டல்ராஜ் எப்படி இறந்தார் என கண்டுபிடித்து அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விட்டல்ராஜுடன் சென்ற 7 பேரையும் கீழையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம் செய்திருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் முத்துப்பேட்டை-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story