ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’


ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’
x
தினத்தந்தி 19 Nov 2017 6:25 AM GMT (Updated: 19 Nov 2017 6:25 AM GMT)

‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது.

‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது.

அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.

இதோ, மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுகொண்டிருக்கும் ஒரு ஆணின் வாழ்க்கை கதை!

மும்பையைச் சேர்ந்த சஞ்சய் கோயல், சிறுவனாக இருக்கும்போதே கொழுகொழு என்று இருப்பார். அதிலும் அவரது வலது மார்பு சற்று எடுப்பாக இருக்கும். வளர வளர எல்லாம் சரியாகிவிடும் என்று அவரது உறவினர்கள், தெரிந்தவர்கள் கூறுவார்கள். ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம்தான் இந்த 45 வயது டெலிகாம் என்ஜினீயரை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளையும் அலட்சியம் செய்ய வைத்துவிட்டது.

‘‘மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எனக்கு நீண்டகாலமாகவே இருந்துவந்தன. எனது 24 வயதில், என் வலது மார்புக் காம்பில் இருந்து ஒருவித திரவம் சுரந்தது, 30 வயதில் உள்ளுக்குள் ஒரு கட்டி போலத் தென்பட்டது. அதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. வலது மார்புக் காம்பில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியபோதுதான் நான் பயந்துபோய் டாக்டரை சந்திக்க முடிவெடுத்தேன்.’’ என்கிறார்.

சஞ்சய் மட்டுமல்ல, அவரது டாக்டரும் அந்த எச்சரிக்கை அறிகுறிகளை கண்டுகொள்ளாததுதான் ஆச்சரியம். கொஞ்சம் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்று அவர் கூறினாராம்.

‘‘ஆன்டிபயாட்டிக்ஸ் சாப்பிட்டதும் அந்த அறிகுறிகள் தற்காலிகமாகத் தணிந்தன. ஆனால் ஓராண்டு கழித்து மறுபடியும் அவை திரும்பி வந்தன. நான் அதே டாக்டரைச் சென்று சந்திக்க, அவர் மறுபடி பழைய மருந்துகளையே கொடுத்தார். மார்பில் வலி எடுக்கத் தொடங்கியதும்தான் நான் டாக்டரை மாற்ற முடிவு செய்தேன்’’ என்கிறார் சஞ்சய்.

தமது குடும்ப நண்பரான அறுவை சிகிச்சை மருத்துவரை சஞ்சய் சந்தித்துப் பேசினார். அது 2010-ம் ஆண்டு. ‘‘நான் சொல்லியதைக் கேட்டதுமே கவலைகொண்ட அவர், ‘பைன் நீடில் அஸ்பிரேஷன் சைட்டாலஜி’ என்ற சிறப்புப் பரிசோதனை செய்யும்படி கூறினார். அதில், எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உறுதியானது. அதன்பின்தான் நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்’’ என்று விளக்குகிறார்.

மருத்துவப் பரிசோதனையில், இவருக்கு இரண்டாம் நிலை புற்றுநோய் பரவிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

‘‘என்னைப் பொறுத்தவரை, புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற எண்ணம் கொண்டவன். எனவே அந்தப் பரிசோதனை முடிவைப் பார்த்த சில மணி நேரத்துக்கு நானும் என் மனைவியும் ஒரு வார்த்தைகூட பேசத் தோன்றாது உறைந்துபோயிருந்தோம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவந்த என்னால் அந்த முடிவை ஜீரணிக்கவே முடியவேயில்லை. நான் தொடர்ந்து யோகாசனமும் செய்துவந்தேன். எனவே, பரிசோதனை முடிவு எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது’’ என்ற சஞ்சய்யின் குரலில் இன்னும் வலி தெரிகிறது.

வழக்கமான கீமோதெரபி, ரேடியோதெரபிக்குப் பின் இவருக்கு ஹார்மோன்தெரபியும் வழங்கப்பட்டது. ஹார்மோன் தெரபி தற்போதும் தொடர்கிறது.

ஆண்களுக்கு அரிதாக உள்ள மார்பகப் புற்றுநோயை, அவர்கள் சீக்கிரம் அறிவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘என்னிடம் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் தாமதமாக அதை அறிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்’’ என்கிறார், மும்பை மருத்துவர் ஆஷீஷ்.

பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.

அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.

மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.

‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

‘‘புற்றுநோயைத் தாண்டியும் வாழ முடியும் என்பதற்கு நானே ஒரு நல்ல உதாரணம். உண்மையைச் சொல்லப் போனால், முன்பு நான் நாட்களை ஓட்டிக்கொண்டிருப்பதைப் போல நினைப்பேன். இப்போது தான், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதாக உணர்கிறேன். நான் தற்போது நிறையப் பயணம் செய்கிறேன், யோகாசனம் செய்கிறேன், முன்பு செய்யாத பல விஷயங்களையும் செய்கிறேன். ஏற்கனவே எங்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், நானும் என் மனைவியும் இப்போது இன்னொரு பெண் குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறோம்’’ என்று நம்பிக்கை மொழி பேசுகிறார், சஞ்சய் கோயல்.

ஆண்களே, கவனம்! 

Next Story