மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் தகவல்


மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:15 PM GMT (Updated: 13 Dec 2017 9:04 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்படும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

காரீப் பருவம் 2017-18-ம் ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கீழ்காணும் 13 இடங்களில் திறக்கப்பட உள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை தாலுகாவில் நார்தாம்பூண்டி, கலசபாக்கம் தாலுகாவில் ஆதமங்கலம்புதூர், எலத்தூர், போளூர் தாலுகாவில் 99 புதுப்பாளையம், கேளூர், அத்திமூர், போளூர் டவுன், சேத்துப்பட்டு தாலுகாவில் மண்டகொளத்தூர், வடமாதிமங்கலம், நம்பேடு, வந்தவாசி தாலுகாவில் பெரியகொழப்பலூர், நெடுங்குணம், தண்டராம்பட்டு தாலுகாவில் கீழ்சிறுப்பாக்கம் ஆகிய 13 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்படுகிறது.

விலை நிர்ணயம்

மேற்படி காரீப் பருவம் 2017-18-ம் ஆண்டிற்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,590 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ.70 என குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,550 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ.50 என குவிண்டாலுக்கு ரூ.1,600 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நெல்லுக்கு உண்டான தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். மேற்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களின் நெல்லினை விற்பனை செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story