சயான்– பன்வெல் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து


சயான்– பன்வெல் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 13 Dec 2017 9:20 PM GMT (Updated: 13 Dec 2017 9:20 PM GMT)

சயான்– பன்வெல் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பை சயான்– பன்வெல் நெடுஞ்சாலையில் நேற்று காலை பன்வெல் நோக்கி கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டேங்கர் லாரி நெருல் அருகே உரன்நாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது, நல்ல வேளையாக அந்த டேங்கர் லாரி அருகே எந்த வாகனமும் செல்லவில்லை. இல்லையெனில் அருகில் சென்ற வாகனத்தின் மீது விழுந்து அமுக்கியிருக்கும். மேலும் அந்த கியாஸ் டேங்கர் அதிர்ஷ்டவசமாக தீப்பற்றவில்லை.

இந்த விபத்தில் கியாஸ் டேங்கர் லாரி டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். கியாஸ் டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தின் காரணமாக சயான்– பன்வெல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பல கி.மீ. தூரத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் 2 கிரேன்கன் மூலம் அந்த கியாஸ் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பின் அந்த டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதன்பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. சம்பவம் தொடர்பாக நெருல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story