சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம்


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம்
x
தினத்தந்தி 17 Dec 2017 10:30 PM GMT (Updated: 17 Dec 2017 6:28 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சுசீந்திரம் கோவிலில் நேற்று கொண்டாடப்பட்டது.

16 வகையான பொருட்களால் அபிஷேகம்

விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், காலை 7 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மாதுளை சாறு, தேன் உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் குவித்தனர். அபிஷேகத்தை காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

லட்டு பிரசாதம்

முன்னதாக பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, முறுக்கு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டது. லட்சம் லட்டு வழங்கும் நிகழ்ச்சியை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தொடங்கி வைத்தார். சாமிதரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் கோவில் கலையரங்கம், எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் கோவில் நடை சாத்தும் வரை மதுரையை சேர்ந்த பிரித்தியங்கரா தேவி வேததர்ம அறக்கட்டளை சார்பில்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் ஆஞ்சநேயருக்கு பஜனை, சந்தனகாப்பு அலங்காரத்துடன் பிச்சி, மல்லிகை, ரோஜா போன்ற மலர்களால் புஷ்பாபிஷேகம்,  ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், தீபாராதனை போன்றவை நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர்  அன்புமணி தலைமையில் கண்காணிப்பாளர் சிவராமச்சந்திரன், மேலாளர் வெங்கடேஷ், கணக்கர் கண்ணன், திருகோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story