நட்சத்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு


நட்சத்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மலாடில், நட்சத்திர ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.

மும்பை,

மும்பை சாந்தாகுரூசை சேர்ந்தவர் தஸ்னீம். இவரது மகன் இத்ரிஸ்(வயது7). கார் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் தஸ்னீம் தனது மகன் இத்ரிஸ், மகள் சாரா ஆகியோருடன் மலாடு மத் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்தார்.

அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 5 குடும்பத்தினரும் வந்திருந்தனர். இதையடுத்து தஸ்னீம் அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் இத்ரிஸ் அங்குள்ள நீச்சல் குளத்தின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சிறுவன் சாவு

இந்தநிலையில், அவன் நீச்சல் குளத்தில் மூழ்கி கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக காந்திவிலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவன் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த மால்வாணி போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் இத்ரிஸ் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரும் அவனை உள்ளே தள்ளி விட்டனரா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
1 More update

Next Story