சேலத்தில் வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்


சேலத்தில் வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 21 Dec 2017 10:45 PM GMT (Updated: 21 Dec 2017 8:21 PM GMT)

சேலத்தில் வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

சேலம்,

சேலம் பட்டைகோவிலில் இருந்து அம்மாபேட்டை மெயின் ரோடு வரை உள்ள ஏராளமான வீடுகளில் வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் உள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். வெண்பட்டு வேட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான பாவு மற்றும் கோராவின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் மூலப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பாவு, கோரா ஆகியவற்றின் விலையை குறைக்க கோரியும், அவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக சேலம் சவுராஷ்ட்ரா வெண்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் வீடுகளில் வெண்பட்டு கைத்தறி கூடங்கள் வெறிச்சோடின.

வருவாய் இழப்பு

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘வெண்பட்டு வேட்டி உற்பத்திக்கு தேவையான பாவு, கோரா ஆகியவற்றின் விலை உயர்வால் நெசவாளர்கள் பலர் வேலையிழந்து உள்ளனர். மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பாவு, கோரா ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.500 வரை எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது‘ என்றனர். 

Next Story