பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ கலெக்டர் எச்சரிக்கை


பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2017 10:30 PM GMT (Updated: 22 Dec 2017 7:13 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் 30-க்கும் மேற்பட்டவை உள்ளன. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியின் படி 50 மைக்ரான் தடிமனுக்கு அதிகமாக பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட வேண்டும். இதனை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

நாளுக்கு நாள் பாலித்தீன் பை பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சில தொழிற்சாலைகளில் 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக பாலித்தீன் பைகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது 50 மைக்ரானுக்கு குறைவாக பாலித்தீன் பைகள் தயாரிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றி தான் பாலித்தீன் பைகளை தயாரிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும்.

அப்போது விதிகளை மீறி பாலித்தீன் பை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்படும். மேலும் வியாபார கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story