கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு


கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2017 10:15 PM GMT (Updated: 31 Dec 2017 10:09 PM GMT)

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே மின்சாரம் துணடிக்கப்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை சென்டிரலில் இருந்து நேற்று காலை ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. காலை 6:20 மணியளவில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்ற நிலையில், அதே ரெயில் பாதையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் உள்ள ‘இன்சூலேட்டர்’ உடைந்து அந்த பகுதி மின்கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் முழுமையான மின்தடை ஏற்பட்டது. மேலும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் அந்த பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சென்னை சென்டிரல்–கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மார்க்கமாக சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் அதேபோல சென்னை நோக்கி வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ரெயில்வே துறையினர் மேற்கண்ட பழுதை சரிசெய்த பிறகு காலை 9 மணியளவில் ரெயில் போக்குவரத்து சீரடைந்தது. இதன் காரணமாக சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி இடையே 2½ மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story