சாலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு கண்டித்து சாலை மறியல்


சாலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:17 PM GMT)

திருவாரூரில் சாலையில் பாதாள சாக்்கடை கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் பாதாள சாக்்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கேக்கரையில் அமைந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் உள்ள கழிவு நீர் உந்து நிலையம் மூலம் கேக்கரைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இதில் கேக்கரை செல்லும் சாலையில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது.

இந்த உந்து நிலையத்தை முறையாக பராமரிப்பு செய்யாததால் கழிவு நீர் ஆள் இறங்கும் தொட்டியில் இருந்து வெளியேறி சாலையில் வழிந்து ஓடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடி அருகே உள்ள குளத்தில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுகாதார சீர்கேட்டை தடுத்திட நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியில் போராட்டத்தினால் திருவாரூர்-கேக்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கழிவு நீர் உந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவு நீர் தொட்டி நிரம்புகிறது. இதனால் ஆள் இறங்கும் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதில் அங்கு உள்ள குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

Next Story