பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்கூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்கூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 17 Jan 2018 7:42 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பனங்கூர் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்து பனங்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தை சுற்றிலும் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கும், தனி நபர் களுக்கும் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இரவு பகல் பாராமல் வெடி வைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் சுண்ணாம்புக்கற்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறன.

மேலும் சுண்ணாம்புக்கற்கள் வெடி வைத்து எடுப்பதால் கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் சுண்ணாம்புக்கற்களை அதிகமாக லாரிகளில் ஏற்றி இந்த கிராமத்தின் வழியாக செல்வதால், சாலையில் ஏற்படும் தூசியால் சுற்றுச்சூழல் மாசடைந்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. மேலும் அரசின் விதிகளை மீறி அதிக ஆழத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிராமங்களிலும் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று முன்தினம் இரவிலிருந்து பனங்கூர் கிராமத்தில் கிராமமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள் கூறுகையில், இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களினால் விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. குடிநீர், உணவு பொருட்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களும் பாதிக்கப்படுகிறது. மேலும், அரசு ஆய்வு மேற்கொண்டு அரசின் விதிமுறைகளை மீறியுள்ள சுரங்கங் களை தடை செய்யவேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு தங்களது நிலங்களை கொடுத்துவிட்டு வாழ்வாதாரம் இன்றி உள்ள இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினர். 

Next Story