ரவுடி சேட்டு கொலை வழக்கில் சரண் அடைந்த பிரபல ரவுடி கொற கோபிக்கு, 2 நாள் போலீஸ் காவல்


ரவுடி சேட்டு கொலை வழக்கில் சரண் அடைந்த பிரபல ரவுடி கொற கோபிக்கு, 2 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 1 Feb 2018 10:45 PM GMT (Updated: 1 Feb 2018 7:14 PM GMT)

ரவுடி சேட்டு கொலை வழக்கில் சரண் அடைந்த பிரபல ரவுடி கொற கோபிக்கு 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து ஓசூர் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

ஓசூர்,

ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 36). ராம்நகரில் ஓட்டல் நடத்தி வந்த இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி சமத்துவபுரம் வீட்டில் இருந்த இவர் காரில் கடத்தப்பட்டார். மறுநாள் (14-ந் தேதி) ஓசூர் அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரவுடி சேட்டுவின் உடல் மீட்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கொற கோபி, ராம் நகரைச் சேர்ந்த ராஜேஷ், நரேஷ், பிரவீன், நவாஸ், சுகேல் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். கொற கோபிக்கும், சேட்டுவிற்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல ரவுடி கொற கோபி, கடந்த 25-ந் தேதி தர்மபுரி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நேற்று போலீசார் சேலம் மத்திய சிறையில் இருந்து ஓசூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர் கொற கோபியை ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது போலீஸ் தரப்பில் கொற கோபியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கொற கோபியை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கொற கோபியை விசாரணைக்காக அட்கோ போலீசார் அழைத்து சென்றனர்.

போலீஸ் விசாரணையில் கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும். இந்த வழக்கில் கொற கோபியை தவிர மற்ற 5 பேரும் கடந்த 17 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். 

Next Story