கோவில்பட்டியில் நகைக்கடை அதிபர் கொலை: சாத்தூர் கோர்ட்டில் 3 பேர் சரண் மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


கோவில்பட்டியில் நகைக்கடை அதிபர் கொலை: சாத்தூர் கோர்ட்டில் 3 பேர் சரண் மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Feb 2018 9:00 PM GMT (Updated: 2 Feb 2018 7:36 PM GMT)

கோவில்பட்டியில் நகைக்கடை அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாத்தூர் கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நகைக்கடை அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாத்தூர் கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைக்கடை அதிபர் கொலை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்ற செந்தில் (வயது 40). இவர் கோவில்பட்டி தெற்கு பஜாரில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 30-ந்தேதி இரவு 11 மணியளவில் தனது நகைக்கடையில் இருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோவில்பட்டி- குருமலை ரோடு கெச்சிலாபுரம் விலக்கு அருகே உள்ள தரைமட்ட தாம்போதி பாலத்தின் ஓடை அருகில், செந்தில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

3 பேர் சரண்

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செந்திலை கொலை செய்த கொலையாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின்பேரில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மேற்பார்வையில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், குருசந்திர வடிவேல் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் செந்தில் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி அருகே கிழவிபட்டியைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவபாண்டி (24), கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த நிர்மல்குமார் மகன் சங்கரநாராயணன் (19), கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஆகிய 3 பேரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சிவபாண்டி உள்ளிட்ட 3 பேரையும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

2 பேருக்கு வலைவீச்சு

நகைக்கடை அதிபரான செந்தில் நகைகளை அடமானம் பிடித்து, பலருக்கு கடன் வழங்கி வந்தார். மேலும் அவர் பலருக்கு புதிய நகைகளை செய்து கொடுத்தும் வந்தார்.

எனவே, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் செந்திலை கடத்தி சென்று, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தனரா?, இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story