பாசன வசதிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் பங்கேற்பு


பாசன வசதிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 1:45 AM GMT (Updated: 8 Feb 2018 1:45 AM GMT)

பாசன வசதிக்காக சாத்தனூர் அணையில் இருந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தண்ணீர் திறந்துவிட்டார்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகில் சாத்தனூர் அணை அமைந்துள்ளது. அணை 119 அடி உயரம் கொண்டதாகும். கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலம் விவசாய பாசனத்திற்கு ஆண்டு தோறும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் சிறிய, பெரிய ஏரிகள் இதன் மூலம் நீர்ஆதாரம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் முழுமையாக அணை நிரம்பி வழிந்ததன் காரணமாக பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் சாத்தனூர் அணையில் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.90 அடி ஆகும். அதாவது 7,298 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட அரசு முடிவெடுத்தது. அதன்படி, நேற்று காலை சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 570 மில்லியன் கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி அணையின் தண்ணீரை திறந்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பேசும்போது, ‘இன்று (நேற்று) முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (தி.மு.க.), தூசி.மோகன் (அ.தி.மு.க.), உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ராஜன், தாசில்தார்கள் சுப்பிரமணியன், மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் சஞ்சீவிகுமார், பரிமேல் அழகன், சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜ், பாசன சங்க தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story