பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலைமறியல் 190 பேர் கைது


பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலைமறியல் 190 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 3:35 AM GMT (Updated: 8 Feb 2018 3:35 AM GMT)

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட 190 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி,

கடந்த 2015-2016, 2016-2017-ம் ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து ஊழலுக்கு துணை போகிற காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலை திடீரென சாலைமறியல் போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில தணை தலைவர் நம்பிராஜன், மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் துரை, துணை தலைவர் சாமியா, துணை செயலாளர் மார்ட்டின், அவை தலைவர் வெங்கிடசாமி, மாவட்ட பிரதிநிதி சீனிராஜ், மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், எட்டயபுரம் தாலுகா தலைவர் பொன்ராஜ், கயத்தாறு வட்டார தலைவர் கிருஷ்ணசாமி, வேலுச்சாமி, வெள்ளைத்துரை மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 190 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு) மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story