கடலும் ஆறும் சங்கமிக்கும் ஆற்றங்கரையை சுற்றுலாத்தலமாக்க முடிவு, அதிகாரிகள் நேரில் ஆய்வு


கடலும் ஆறும் சங்கமிக்கும் ஆற்றங்கரையை சுற்றுலாத்தலமாக்க முடிவு, அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2018 10:00 PM GMT (Updated: 23 Feb 2018 7:06 PM GMT)

கடலும் வைகை ஆறும் சங்கமிக்கும் ஆற்றங்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் ஆற்றங்கரை கிராமத்தில் வைகை ஆறும், கடலும் சங்கமிக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் கடல் அலைகளின் தாக்கத்தால் கடலும், ஆறும் சந்திக்கும் இடத்தில் மணல் மேடு ஏற்பட்டு ஆற்று தண்ணீர் செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும் மணல் மேடு காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

ஆற்றுக்கும் கடலுக்கும் இணைப்பு தடைபட்டதால் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் நேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு காணப்பட்ட மணல் திட்டுக்களை அகற்றவும், முகத்துவாரத்தை ஆழப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

அதற்கான அனுமதி கிடைக்காததால் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவின்பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேசுவரி, சுற்றுச்சூழல் துறை பொறியாளர் லிவிங்ஸ்டன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் முகமது அலி ஜின்னா ஆகியோர் நேரில் சென்று படகு மூலம் கடலில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் கடலையும், ஆற்றுப்பகுதியையும் இணைத்து ஆற்றங்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story