கிணற்றில் தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி பலி போலீசார் விசாரணை


கிணற்றில் தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 9:06 PM GMT)

சூளகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னகுத்திப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் கொண்டப்பன் (வயது 35). ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலம் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கொண்டப்பன் அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் பாறையில் விழுந்து காயம் அடைந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கொண்டப்பனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story