பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:45 PM GMT (Updated: 8 March 2018 9:34 PM GMT)

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி,

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் (பேஸ்புக்) பதிவில், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறியிருந்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், எச்.ராஜாவை கண்டித்து நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் நாகர்கோவில் நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் வக்கீல் மகேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் தில்லைச்செல்வம், ஹெலன்டேவிட்சன், சதாசிவம், சிவராஜ், சேக்தாவூது, பசலியான், அழகம்மாள்தாஸ், பெஞ்சமின், திராவிடர் கழக இளைஞரணி மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் கொட்டாரம் அருகே பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் முன்னிலை வகித்தார். வக்கீல் பாலஜனாதிபதி, ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story