குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு


குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 2 April 2018 11:00 PM GMT (Updated: 2 April 2018 9:28 PM GMT)

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பலர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதில் ஆத்தூர் அருகே துண்டுபெரும்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்களது பகுதியின் அருகே காகித ஆலையின் கழிவு நீர் செல்வதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது. கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்று நீரை கூட கால்நடைகள் குடிப்பதில்லை.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பைப் லைன் துண்டிக்கப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. எனவே துண்டிக்கப்பட்ட பைப் லைனை சரி செய்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இதேபோல ஆத்தூர் அருகே தன்னாசி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதிக்கு காகித ஆலை மூலம் தினசரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது காவிரியில் தண்ணீர் வருவதில்லை என காரணம் காட்டி ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிகவும் தண்ணீர் குறைவாக வழங்கப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே காகித ஆலை மூலம் தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “பழைய தாந்தோனி நகராட்சி பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரானது காலதாமதமாக வருவதோடு மட்டுமில்லாமல் மாசுப்பட்ட குடிநீராக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. மேலும் கலங்கலான குடிநீரை பாட்டிலில் கொண்டு வந்திருந்தனர். இதேபோல அப்பகுதி பொதுமக்கள் அளித்த மற்றொரு மனுவில், “தாந்தோன்றிமலை பகுதியில் சாலை விரிவாக்க பணி கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. விபத்தினால் உயிர்சேதம் ஏற்படும் முன்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

அமராவதி ஆற்றில் கிணறு...

பெரிய ஆண்டாங்கோவில் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், “எங்களது பகுதியில் அமராவதி ஆற்றில் கிணறுகள் அமைத்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து குடிநீராகவும், சாயப்பட்டறைக்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரி ஒன்றுக்கு ரூ.300-ம், டிராக்டர் ஒன்றுக்கு ரூ.250-ம், டேங்கர் லாரிகளுக்கு ரூ.600 வீதமும் தண்ணீரை விற்பனை செய்து தனிநபர்கள் லாபம் சம்பாதித்து வருகின்றனர். எனவே அமராவதி ஆற்றில் உரிமம் இல்லாத கிணறுகளை அகற்றி கொடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஆவண செய்ய வேண்டும். ரெட்டிப்பாளையம், புதூர், சரஸ்வதி நகர், எம்.ஜி.ஆர்.நகர், வடிவேல் நகர், செல்வம் நகர், பாலிடெக்னிக், சின்ன ஆண்டாங்கோவில், ஸ்டேட் பாங்க் காலனி ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், “வாங்கல் குப்புச்சிபாளையத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கான ரேஷன் கடை 2 கிலோ மீட்டார் தொலைவில் வாங்கலில் அமைந்துள்ளதால் பொருட்கள் வாங்க சென்று வர சிரமமாக உள்ளது. மேலும் வாங்கலில் 2 ரேஷன் கடைகள் ஒரே இடத்தில் உள்ளன. எனவே குப்புச்சிபாளையம் பகுதி மக்களுக்கான ரேஷன் கடையை குப்புச்சிபாளையத்திற்கு இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினரான நாகராஜன் அளித்த மனுவில், விராலிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படவில்லை எனவும், தேர்தல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தார்.

தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஏமூர் ஊராட்சி நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருவதாகவும், தங்கள் பகுதியில் ஆழ்குழாய் அமைத்து 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.

உப்பிடமங்கலம் குப்பகவுண்டனூர் பகுதியில் தார்ச்சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர். மாயனூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

கரூர் பஸ் நிலையம் எதிரே காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர். அம்பேத்கர் மக்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் கண் பார்வையற்ற பயனாளி ஒருவருக்கு நவீன மடக்கு ஊன்று கோலை கலெக்டர் அன்பழகன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கண் பார்வையற்றவர்களுக்கு நல்ல நிலையில் உள்ளவர்கள் சாலையை கடக்க உதவி செய்வது மட்டும் நமது கடமை ஆகிவிடாது. கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். கண்தானம் செய்யும் படிவத்தில் கையொப்பம் போட்டுவிட்டால் மட்டும் போதாது. நாம் இறக்கும் போது நம் வீட்டில் உள்ள உறவினர்கள் கண்ணை எடுத்து கொள்ள அனுமதி அளிக்க செய்ய வேண்டும்” என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story