காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மண்ணை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மண்ணை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 April 2018 10:45 PM GMT (Updated: 3 April 2018 8:22 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கும்பகோணத்தில் நேற்று 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் மண்ணை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கும்பகோணம் பகுதியில் கடையடைப்பு நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று கும்பகோணம் பகுதியில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் நேற்று மூடப்பட்டது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள் தேங்கின. மேலும் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்யும் 500-க்கும் மேற்பட்ட சில்லரை காய்கறி வியாபாரிகள் நேற்று அதிகாலை 4 மணிக்கு காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கும்பகோணம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் தலைமையில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி, கரும்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் மத்திய அரசை கண்டித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி

கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அதே இடத்தில் தரையில் அமர்ந்து வாழை இலையில் மண்ணை நிரப்பி அதை சாப்பிடுவது போல் நடித்து காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கும்பகோணம் தபால்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர்.

இதைப்போல கும்பகோணம் வக்கீல்கள் சங்கத்தினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கும்பகோணம் கோர்ட்டு வளாகம் முன் சங்க தலைவர் ராஜசேகர் தலைமையில் பச்சை துண்டு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்கீல்கள் ஒரு வாரத்துக்கு கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசு தன்னாட்சி கலை கல்லூரியில் நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்தனர். 

Next Story