காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டம் நடத்துவது கண்துடைப்பு - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்


காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டம் நடத்துவது கண்துடைப்பு - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 3 April 2018 10:30 PM GMT (Updated: 3 April 2018 9:02 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது கண்துடைப்பு. சட்டப்படி இதனை அமைக்க பாரதீய ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவை,

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினை அரை நூற்றாண்டு பிரச்சினை. இப்போதுள்ள எம்.பி.க்கள் ராஜினாமாவை கூட ஒழுங்காக செய்ய முடியவில்லை. ராஜினாமா செய்கிறேன் என்கிறார்கள். அதன்பின்னர் பின் வாங்குகிறார்கள். என்னை பொறுத்தமட்டில் தமிழக மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்கிறேன். மக்களுக்காக போராடி காவிரியை பெற்றுத்தருவதில் பாரதீய ஜனதா உறுதியாக உள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காவிரி பிரச்சினை தீர்க்கப்படாததற்கு அவர்களே காரணம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாங்கள் எந்த விதத்திலும் விடமாட்டோம் என்று கூறுகிறார்கள். காவிரி பிரச்சினை விரைவாக முடிய வேண்டும் என்று தமிழக மக்கள் தத்தளிக்கும் இந்த நேரத்தில் சித்தராமையா மேகதாதுவில் அணைகட்ட ரூ.6 ஆயிரம் கோடி நிதிஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஸ்டாலின், திருநாவுக்கரசர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டம் என்பது கண் துடைப்பு. போராட்டத்தால் தீர்வு கிடைக் காது. சட்ட விதிமுறைகள்படிதான் தீர்வு கிடைக்கும். இதை நோக்கித்தான் பாரதீய ஜனதா ஆட்சி செல்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காங்கிரஸ் மீதும், ஸ்டாலின் மீதும்தான் தொடர வேண்டும். தமிழகத்தை தொழில் நகரமாக மாற்ற மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு கருப்பு கொடி காட்டுகிறார்கள். ஒரு எம்.பி.யை கூட ராஜினாமா செய்ய வைக்க மனம் இல்லை. அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்து உணர்வை வெளிப்படுத்த வேண்டியதுதானே. சட்டத்தின்படி காவிரிக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story