காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 10:15 PM GMT (Updated: 5 April 2018 7:43 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

காஞ்சீபுரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரத்தில் வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காஞ்சீபுரத்தின் முக்கிய வீதியான காமராஜர் தெரு, பஸ் நிலையம், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட், காந்தி ரோடு, மேட்டுத்தெரு உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள ஜவுளி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

கோவில்கள் நிறைந்த காஞ்சீபுரத்திற்கு வந்திருந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் உணவு கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டனர். பட்டு சேலைகள் வாங்க வந்திருந்தவர்களும் கடைகள் திறக்கப்படாததால் மிகவும் அவதிப்பட்டனர்.

பூந்தமல்லி, போரூர், காட்டுப்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, அய்யப்பன் தாங்கல், வளசரவாக்கம், மதுரவாயல், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், காட்டூர், திருவெள்ளைவாயல், அனுப்பம்பட்டு, இலவம்பேடு, மணலிபுதுநகர், அத்திப்பட்டு, நாப்பாளையம், தடப்பெரும்பாக்கம், பொன்னேரி, பேரம்பாக்கம், தச்சூர்கூட்டுசாலை, சோழவரம், அருமந்தை, பழவேற்காடு, திருப்பாலைவனம், மெதூர் ஆகிய இடங்களில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

அதேபோல் ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

Next Story