முதன்மை சான்றுகள் இல்லாத ரூ.8 லட்சம் மதிப்புள்ள பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய தடை - அதிகாரிகள் அதிரடி சோதனை


முதன்மை சான்றுகள் இல்லாத ரூ.8 லட்சம் மதிப்புள்ள பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய தடை - அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 6 April 2018 11:15 PM GMT (Updated: 6 April 2018 9:31 PM GMT)

ஓசூரில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி முதன்மை சான்றுகள் இல்லாத ரூ.8 லட்சம் மதிப்புள்ள பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் வினியோக மையங்களில் அங்கீகரிக்கப்படாத உரம், இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்ய கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மோகன் விஜயகுமார் தலைமையில் 7 சிறப்புபடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு படையினர் நேற்று ஓசூர் நகரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பூச்சி மருந்துகளில் முதன்மை சான்றுகள் இல்லாமல் வினியோகம் செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, ரூ.8 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கண்ணன் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43 மொத்த உரம் விற்பனையாளர்களுக்கும், 430 சில்லரை பூச்சி மற்றும் உரம் விற்பனையாளர்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமத்தில் அனுமதிக்கப்படாத உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வினியோகம் செய்யக்கூடாது. விற்பனை செய்யும் இடு பொருட்களுக்கு உரிய பட்டியல் வழங்க வேண்டும். தரமான இடு பொருட்களை மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும். பட்டியல்களில் விவசாயிகளின் கையொப்பம் பெற வேண்டும். இருப்பு மற்றும் விலை விவர தகவல் பலகை பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்காத உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் கூறினார்.

Next Story