ராகுல் காந்தி கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் பரமேஸ்வர் தகவல்


ராகுல் காந்தி கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் பரமேஸ்வர் தகவல்
x
தினத்தந்தி 6 April 2018 9:45 PM GMT (Updated: 6 April 2018 9:45 PM GMT)

பெங்களூருவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ராகுல் காந்தி கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டையொட்டி மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நேற்று அந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை(அதாவது, இன்று) கர்நாடகம் வருகிறார். கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை (இன்று) காலை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் மூலம் கோலார் மாவட்டம் முல்பாகலுக்கு செல்கிறார். முல்பாகல் குருடுமலை விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன் பிறகு கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பிறகு 8-ந்தேதி (நாளை) பெங்களூருவில் தொழில் அதிபர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், பெண்களுடன் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.

இதில் 5 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துவிட்டோம். தற்போது எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் டிக்கெட் கிடைப்பது உறுதி. இதில் அம்பரீசின் பெயரும் அடங்கும். ஒரே நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story