2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை அமைச்சர் தகவல்


2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2018 10:45 PM GMT (Updated: 15 April 2018 8:42 PM GMT)

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கல்லூரி வளாகத்தில் புதிய காட்சி தொடர்பியல் ஆய்வகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தமிழத்தில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான் எம்.பில் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் இந்திய அளவில் 8-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அரசு கலைக்கல்லூரி கல்வியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.940 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு 862 வகுப்பறைகள் மற்றும் 178 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.210 கோடி கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது முதல்கட்டமாக 1,863 கவுரவ பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக 1,661 கவுரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 2,740 உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

முன்னதாக கல்லூரிக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான கல்வி மேம்பாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார். இந்த விழாவில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் கோபால், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் எழிலன், உதவி பேராசிரியர் செந்தில்குமார், தாசில்தார் ரேவதி மற்றும் கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story