சகாப்பூர் பகுதியில் குடிநீர் பஞ்சம்; ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை


சகாப்பூர் பகுதியில் குடிநீர் பஞ்சம்; ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2018 11:07 PM GMT (Updated: 16 April 2018 11:07 PM GMT)

ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை,

மும்பையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா பகுதி உள்ளது. இங்கு தான் வைத்தர்ணா, தான்சா, பட்சா ஆகிய மிகப்பெரும் ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் இருந்து தான் சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வசிக்கும் மும்பைக்கு குறைவில்லாமல் குடிநீர் வருகிறது. எனினும் ஏரிகளை சுற்றி உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிக்க ஒரு குடம் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களை குடிநீர் பஞ்சம் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது.

ஆண்டு தோறும் கோடை காலம் தொடங்கினாலே சகாப்பூர் தாலுகா கிராம மக்களின் பாடு திண்டாட்டம் தான். கிணறுகளில் நீர் வற்றிவிடும். நிலத்தடி நீரை தவிர இவர்களுக்கு நீர் ஆதாரங்கள் என எதுவும் இல்லை. எனவே இந்த மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கிணற்றில் சொட்டு, சொட்டாக ஊறும் தண்ணீரை எடுத்துச்செல்கின்றனர். ஒரு சில கிராமங்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இது குறித்து காரடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது:- 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஊறும் தண்ணீரை நீண்ட கயிறைப்போட்டு எடுக்கிறோம். ஒரு குடம் தண்ணீர் நிரப்பவே ஒரு மணிநேரம் ஆகிவிடும். காலை 7 மணிக்கு வந்தால் 4 குடத்தை நிரப்பி செல்ல 12 மணி ஆகிவிடுகிறது. தண்ணீர் நிரப்ப கிணற்றடியில் காத்திருந்தே பாதி ஆயுள் போய்விடுகிறது என உருக்கமாக கூறினார்.

குடிக்கும் தண்ணீருக்கே இந்த பாடு என்றால் இதர தேவைக்கு என்ன செய்வார்கள்?. இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், தினமும் எங்களால் துணியெல்லாம் துவைக்க முடியாது. வீட்டில் சேரும் அழுக்கு துணிகளை சேர்த்து வைப்போம். 10 நாட்களுக்கு ஒரு முறை கடோலி ஆற்றுக்கு (சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது) சென்று துவைத்து வருவோம், என்றார்.

சகாப்பூரை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கும் பட்சா, வைத்தர்ணா போன்ற மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து தண்ணீர் தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து நீண்ட நாட்களாக சகாப்பூர் மக்களின் குடிநீர் உரிமைக்காக போராடி வரும் சந்தோஷ் ஷிண்டே என்பவர் கூறும்போது:- மும்பைக்கு வினியோகிக்கும் ஒரு நாள் குடிநீரை எங்களுக்கு வழங்கினாலே அதை நாங்கள் ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தி கொள்வோம். தற்போது நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளோம். கோடை காலத்தில் நிலத்தடி நீரும் வற்றி விடும். எனவே இப்பகுதி மக்களுக்கு ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story