காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோட்டார்சைக்கிள் பழுதுநீக்குவோர் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோட்டார்சைக்கிள் பழுதுநீக்குவோர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 8:42 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பழுதுநீக்குவோர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

கும்பகோணம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோட்டார்சைக்கிள் பழுது நீக்குவோர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில சங்க துணைச்செயலாளர் எஸ்.மோகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜானகிராமன், மாநில பொதுச்செயலாளர் சம்பூர்ணம், மாநில பொருளாளர் கிஸிங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அன்பழகன் எம்.எல்.ஏ., அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

போராட்டத்தில் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்டிரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டும். கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பழுதுநீக்குவோர் 300 பேர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தால் கும்பகோணத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள், உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பழுதான தங்களது வாகனத்தை சரிசெய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாயினர். 

Next Story