தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்: நாகை மீனவர்கள் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரம்


தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்: நாகை மீனவர்கள் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரம்
x
தினத்தந்தி 20 April 2018 4:15 AM IST (Updated: 20 April 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் நாகையில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

கடந்த 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதி தொடங்கி அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. ஆனால் கரை பகுதிக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சிறியவகை படகுகள் கடலுக்கு செல்லலாம்.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதை தொடர்ந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதில் படகை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரி செய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீனவர்கள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒருவார காலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். இதனால் நாகையில் ஐஸ் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறும். ஆனால் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் தற்போது ஐஸ் தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடித்து வரும் படகுகளில் இருந்து மீன்களை இறக்கும், ஐஸ் கட்டிகள், டீசல் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வரும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் தற்போது வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் 1,600 விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலத்தால் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். 

Next Story