குடிநீர் கேட்டு கம்பம் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு கம்பம் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 April 2018 10:48 PM GMT (Updated: 19 April 2018 10:48 PM GMT)

குடிநீர் கேட்டு கம்பம் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கம்பம்,

கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குழாய் உடைப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதவிர மின்விளக்கு, சாக்கடை கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரஞ்ஜோதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story