கடன் பிரச்சினையை சமாளிக்க தனது வீட்டுக்கு தீ வைத்து நாடகமாடிய தொழிலாளி மீது வழக்கு


கடன் பிரச்சினையை சமாளிக்க தனது வீட்டுக்கு தீ வைத்து நாடகமாடிய தொழிலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 20 April 2018 10:33 PM GMT)

கடன் பிரச்சினையை சமாளிப்பதற்காக தனது வீட்டுக்கு தீ வைத்து நாடகமாடிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெய்க்காரப்பட்டி, 

பழனியை அடுத்த தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் மூர்த்தி (வயது 42). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்த குடிசை வீட்டுக்கும் தீ பரவியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடிசை வீடுகளில் பற்றிய தீயை அணைத்தனர். இதற்கிடையே தீ விபத்தில் காயமடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மூர்த்திக்கு கடன் பிரச்சினை இருப்பதும், கடன் கொடுத்தவர்களை சமாளிப்பதற்காக மூர்த்தியே தனது வீட்டுக்கு தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் தீ வைத்ததாக அப்பகுதி மக்களிடம் கூறி நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரரான மாரிமுத்து (26) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மூர்த்தி மீது பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story