கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 10:45 PM GMT (Updated: 24 April 2018 6:54 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா துப்புரவு பணியாளர் நல சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்பிட வேண்டும். வார ஓய்வான ஞாயிற்றுக் கிழமையிலும் பணிக்கு அழைக்கும், ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும்.

வேலைவாய்ப்பு

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும், ஊழலுக்கு வழி வகுக்கும் தனியார் மயத்தினை கைவிட வேண்டும். துப்புரவு பணியாளர் களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஆண்டிற்கு 2 முறை வழங்க வேண்டும். கருணை நியமன பணி ஆணையை உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story