தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 April 2018 9:30 PM GMT (Updated: 24 April 2018 7:11 PM GMT)

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு

தமிழக அரசு உத்தரவின் படி 29-வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் முதல் வருகிற 30-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.

விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது எம்.ஜி.ஆர். பூங்கா முன்பு புறப்பட்டு தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது. பேரணியின் போது சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு விதிகள் ஒலிபரப்பப்பட்டது.

ஸ்டிக்கர்

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக் கர்களை வாகனங்களில் ஒட்டினார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு மற்றும் போக்குவரத்து சின்னங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த, சிறப்பு வாகனத்தினை பார்வையிட்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் அனைத்து போக்குவரத்து துறை அலுவலர்களும் சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஜி.ரங்கநாதன் (தூத்துக்குடி), மன்னர்மன்னன் (கோவில்பட்டி), சக்திவேல் (திருச்செந்தூர்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், ராஜேஷ், அமர்நாத், பாத்திமா பர்வின், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சமுத்திரம், கிளை மேலாளர்கள் பாஸ்கர் மற்றும் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story