திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 1 May 2018 4:00 AM IST (Updated: 1 May 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் தினத்தை யொட்டி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது. தொழிலாளர் தினத்தை யொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டிப்பாக கிராம சபை கூட்டத்தை நடத்தவேண்டும்.

இந்த கிராமசபை கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம்,அந்தியோதயா இயக்கம்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2018-19 பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்) குறித்து விவாதிக்க வேண்டும்.

திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தல், குழுக்களுக்கு ஒத்துழைப்பு அளித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரபட்டியல் தயார் செய்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துரைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

கிராம சபை கூட்டங்களுக்கு பிற துறைகளை சார்ந்த அலுவலர்களையும் கலந்துகொள்ள செய்து அவர்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்த கிராமசபை கூட்டத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து சிறப்பான முறையில் கிராமசபை கூட்டத்தை நடத்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story