மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பிற்கு மத்திய அரசு உதவி செய்யும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பிற்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை வந்தார். அவர் சாமி தரிசனம் செய்து விட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதன் பின்பு அவர் தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதிக்கு சென்று கள்ளழகரை தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து சுற்றுலா மாளிகைக்கு சென்ற அவரை கலெக்டர் வீரராகவராவ் சந்தித்தார். அவரிடம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்திற்கு பிறகு செய்யப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை புனரமைக்க தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. பாரம்பரியம் மற்றும் அழகை மீட்பதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.
இந்தியா முழுவதும் 1,427 கிராமங்களில் 6 வகையான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 34 கிராமங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 35 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் கிராமங்களை சென்றடைந்து உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி, மந்திரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கிராமம், கிராமமாக நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். நானும் ராமநாதபுரத்திற்கு சென்று ஆய்வு செய்தேன். ஜன்தன் யோஜனா கிராம அபிவிருத்தி திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதில் சற்று சுணக்கம் இருக்கிறது. இத்திட்டங்களும் விரைவில் மக்களை சென்றடையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story