திருப்பூரில் முகநூலில் பிரதமரை தவறாக சித்தரித்து படம் வெளியிட்ட வாலிபர் கைது


திருப்பூரில் முகநூலில் பிரதமரை தவறாக சித்தரித்து படம் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

திருப்பூரில் முகநூலில் பிரதமரை தவறாக சித்தரித்து படம் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சின்னசாமி கடந்த 2-ந் தேதி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பிரபாகரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி படத்தை தவறாக மார்பிங் செய்து சித்தரித்து படம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின்படி, துணை கமிஷனர் கயல்விழி கண்காணிப்பில் வடக்கு உதவி கமிஷனர் அண்ணாத்துரை மேற்பார்வையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயமோகன், போலீஸ்காரர்கள் கல்யாணபாண்டி, அம்சத்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் குறித்தும், அவருடைய முகநூல் அடையாளத்தை வைத்தும், சம்பந்தப்பட்டவரின் முகநூல் நண்பர்கள் குறித்தும் விசாரணை செய்யப்பட்டது.

இதில் முகநூலில் பதிவிட்டவர் பிரபாகரன்(வயது 23) என்பதும், திருப்பூர் எஸ்.வி.காலனியில் 4-வது வீதியில் தங்கியிருந்து வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. பிரபாகரனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த வளையமாதேவி ஆகும்.

இதைத்தொடர்ந்து பிரபாகரனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு பிரபாகரனை கைது செய்த தனிப்படை போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் பாராட்டினார். 

Next Story