கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் - விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்


கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் - விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 10:32 PM GMT)

விவசாயிகளை ஒன்று திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.

திருவாரூர்,

காவிரி வழக்கில் வருகிற 8-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம் என திருவாரூரில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் கூறினார்.

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு, சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர்கள் சம்பந்தம் (நாகை), பாலசுந்தரம் (தஞ்சை), மாதவன் (புதுக்கோட்டை), சிவசூரியன் (திருச்சி), சேகர் (கடலூர்), தெய்வசிகாமணி (அரியலூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் பல காலக் கெடுக்களை கொடுத்தும் வழக்கம்போல் கடந்த 3-ந் தேதியன்று நடந்த விசாரணையில் மேலாண்மை வாரியம் வரைவு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் அவகாசம் மத்திய அரசு கேட்டுள்ளது. தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் தண்ணீரை தர முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தண்ணீரை பெறுவதற்கும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. காவிரி வழக்கில் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் அனைத்து விவசாயி களையும் ஒன்று திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.

கர்நாடக அரசு இதுவரை தமிழகத்திற்கு 65 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமோ தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நீரை வைத்து தமிழகத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Next Story