‘செட்டாப் பாக்ஸ்’ பற்றாக்குறை சில மாதங்களில் நீங்கும் மாவட்ட துணை மேலாளர் பேச்சு


‘செட்டாப் பாக்ஸ்’ பற்றாக்குறை சில மாதங்களில் நீங்கும் மாவட்ட துணை மேலாளர் பேச்சு
x
தினத்தந்தி 4 May 2018 10:32 PM GMT (Updated: 4 May 2018 10:32 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் ‘செட்டாப் பாக்ஸ்’ பற்றாக்குறை சில மாதங்களில் நீங்கும் என்று மாவட்ட துணை மேலாளர் இளம்செழியன் கூறினார்.

ஆம்பூர்,

ஆம்பூர் வட்ட அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஒத்துழைப்புடன் ஆம்பூரில் புதிய டிஜிட்டல் துணை கட்டுப்பாட்டு அறை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவி, பொருளாளர் சந்திரகுப்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சேகர் வரவேற்றார். ஆம்பூர் தாசில்தார் சாமுண்டீஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன வேலூர் மாவட்ட துணை மேலாளரும், தாசில்தாருமான இளஞ்செழியன் புதிய டிஜிட்டல் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

கடந்த சில மாதங்களாக மக்கள் அரசு கேபிளை விரும்புகின்றனர். ஆம்பூர் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கம், அரசின் புதிய டிஜிட்டல் ‘செட்டாப் பாக்ஸ்’ இணைக்க சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ‘செட்டாப் பாக்ஸ்’ அனைவருக்கும் வழங்க முடியவில்லை. இன்னும் சில மாதங்களில் அந்த பற்றாக்குறை நீங்கும்.

அரசு கேபிள் டி.வி. வயர்களை துண்டிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கேபிளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும் போது சந்தா தொகை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி.வி. தொழில்நுட்ப உதவியாளர் முத்துகுமார், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story