கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு


கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2018 11:29 PM GMT (Updated: 4 May 2018 11:29 PM GMT)

கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சேலம்,

கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில் இன்று (சனிக் கிழமை) காலை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசல் அமைப்பு, பார்வையாளர்கள் அமரும் இடம், போலீஸ் பாதுகாப்பு, மாடுபிடி வீரர்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் நேற்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு கூட்டுநர் மருத்துவர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

செந்தாரப்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் காவல்துறையினரால் உறுதி செய்திடவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முழுவதுமாக கால்நடை பராமரிப்புத் துறையினரால் முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின் விதிமுறைகளின்படி அந்த காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளை கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித்துறையிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவிக்குதித்து வராத வகையில் குறைந்த பட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்கவும், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைப்பாளர்கள் அதற்கான விதிமுறைகளை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடைபிடிக்க வேண்டும். மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story