முன்னாள் துணை முதல்-மந்திரி சகன் புஜ்பாலுக்கு நிபந்தனை ஜாமீன்


முன்னாள் துணை முதல்-மந்திரி சகன் புஜ்பாலுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 4 May 2018 11:41 PM GMT (Updated: 4 May 2018 11:41 PM GMT)

ஊழல் புகாரில் முன்னாள் துணை முதல்-மந்திரி சகன் புஜ்பாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மும்பை நகரை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி சகன் புஜ்பால். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதாகவும், இதன் மூலம் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சகன் புஜ்பால் மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை வேண்டுமென்றே சில தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அந்த நிறுவனங்களிடம் முறைகேடாக பணம் பெற்றது தெரியவந்தது. இதனால் மாநில அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

சகன் புஜ்பால் இந்த பணத்தை தனது உறவினர் சமீர் புஜ்பாலுடன் சேர்ந்து பல்வேறு போலி நிறுவனங்களில் முதலீடு செய்து பணமோசடியில் ஈடுபட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிகை மும்பை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சகன் புஜ்பால் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு நிராகரித்தது.

இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.தேஷ்முக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 70 வயதான சகன் புஜ்பாலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது வக்கீல் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு சம்மன் அனுப்பும்போதெல்லாம் தவறாமல் ஆஜராக வேண்டும், விசாரணை கோர்ட்டு அனுமதியின்றி மும்பையைவிட்டு வெளியே செல்லக் கூடாது மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை கலைக்கவோ, சாட்சியங்களை அழிக்கவோ முயற்சி செய்யக்கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டால் உடனடியாக அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் சமீர் புஜ்பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சகன் புஜ்பாலுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story