சமுதாயத்தில் ஏற்படும் சவால்களுக்கு மாணவர்கள் தீர்வு காண வேண்டும் - கோவை வேளாண்மை பல்கலைக்கழக ‘டீன்’ பேச்சு


சமுதாயத்தில் ஏற்படும் சவால்களுக்கு மாணவர்கள் தீர்வு காண வேண்டும் - கோவை வேளாண்மை பல்கலைக்கழக ‘டீன்’ பேச்சு
x
தினத்தந்தி 5 May 2018 9:30 PM GMT (Updated: 5 May 2018 8:18 PM GMT)

சமுதாயத்தில் ஏற்படும் சவால்களுக்கு மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என்று பொங்கலூரில் ஏஞ்சல் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கோவை வேளாண்மை பல்கலைக்கழக ‘டீன்’ மகிமைராஜா பேசினார்.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள ஏஞ்சல் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. விழாவை கல்லூரி முதன்மை செயல் அதிகாரி சிவக்குமார் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் நளினி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக ‘டீன்’ (வேளாண்மை) மகிமைராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள், சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பட்டம் பெற்ற மாணவ- மாணவிகள் சமுதாயத்தில் என்ஜினீயரிங் பட்டதாரி களாக செயல்பட உள்ளர்கள். இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்கிய உங்கள் பெற்றோரை பாராட்டுகிறேன். இன்று உங்கள் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் முடிந்து புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. எனவே நடந்து முடிந்ததை விட எதிர்காலம் மிகவும் முக்கியமானது. எனவே பொறுப்புள்ள என்ஜினீயரிங் பட்டதாரி என்ற எண்ணத்துடன் படித்ததை செயலாக்கம் செய்யவேண்டும். சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு சவால்களை உங்கள் படிப்பின் மூலம் தீர்வு காணவேண்டும்.

உலக அரங்கில் இந்தியா அறிவியல், உழைப்பு, திறன் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. இளைஞர்கள் தான் இந்தியாவின் உண்மையான பலம். உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்றார்போல் வெற்றிகரமான பசுமை புரட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனித வளத்தில் உலகில் 2-ம் இடத்திலும், ராணுவ பலத்தில் 3-வது இடத்திலும், அணு ஆய்வில் 6-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் சவால்களும், வாய்ப்புகளும் சம அளவில் உள்ளன. இதை மாணவர்கள் சரியாக புரிந்து நடந்துகொண்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதுகலை படிப்பில் 7 பேரும், இளங்கலை படிப்பில் 300 பேரும் பட்டம், சான்றிதழ்கள் பெற்றனர். பேராசிரியை வனிதா, துறைத்தலைவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story