பல்லடத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்


பல்லடத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 6 May 2018 11:15 PM GMT (Updated: 6 May 2018 7:42 PM GMT)

பல்லடத்தில் நடந்த விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்தவர் வாசன் (வயது 46). இவருடைய மனைவி கோமதி (32). இவர்களுக்கு சிவசுப்பிரமணியம் (14) , மீனதர்சினி (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். வாசன் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

கோமதி பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 4-ந் தேதி இரவு 9 மணியளவில் கோமதி பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய ஸ்கூட்டர் அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் சென்ற போது எதிரில் வந்தவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஸ்கூட்டரை நிறுத்தினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த கோமதி பலத்த காயம் அடைந்தார்.

உடனே கோமதியை சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 5-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து கோமதியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கோமதியின் குடும்பத்தினரிடம் கேட்டனர்.

அதற்கு கோமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் கோமதியின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், இதயம், கண்கள் மற்றும் எலும்பு, தோல் ஆகியவற்றை ஆபரேஷன் செய்து எடுத்தனர். இதில் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் உள்ள ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் கோவை குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரிக்கும், இதயம் சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கும், 2 கண்கள் கோவை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கும், எலும்பு, தோல் ஆகியவை கோவை கங்கா ஆஸ்பத்திரிக்கும் வழங்கப் பட்டது.

இது குறித்து கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி சேர்மன் நல்லா பழனிசாமி கூறுகையில், ‘கோமதியின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் வழங்க முன்வந்ததால் அவர் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்’ என்றார்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த கோமதியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் என்பதால் அவரது உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story